மட்டக்களப்பு தலைமையக காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
காவல்துறை பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான தலைமையகக் காவல் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், கருவப்பங்கேணி பகுதியிலுள்ள பிரபல போதைப் பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது 34 வயதுடைய அந்தப் பிரபல வியாபாரி 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையுடன் வாக்குவாதம்: கைது செய்யப்பட்டவரை காவல்துறையினர் கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பெண்கள் உட்படச் சிலர் ஒன்றிணைந்து காவல்துறையினரைத் தடுத்து, பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தாண்டி, காவல்துறையினர் சந்தேகநபரை மீட்டுச் சென்றனர்.
அதேவேளை, திருப்பெருந்துறை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவர் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் வியாபாரியை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

