அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் ஏழாலையைச் சேர்ந்த 31 வயதுடைய அகிலன் திவ்யா என்ற பெண்ணும், 60 வயதுடைய மற்றுமொரு பெண்ணும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த வாகனம் அநுராதபுரம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகனத்தில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அநுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதோடு, கடைத் தொகுதி ஒன்றுக்குள்ளும் புகுந்தது.
இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.