இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மீனவர் பிரச்சினையில் தமிழக அரசு வெறும் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதாகவும், உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அவர் நேரடியாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காசாக்குடிமேடு மற்றும் கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்கள் கடந்த 14-ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்து, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் செயல் மீனவக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தால் பிப்ரவரி 3-ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பின்னரும், 9 தமிழக மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதை விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 3 மீனவர்கள் அபராதத் தொகை செலுத்த முடியாமல் சிறையில் வாடுவதையும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். “தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது” என அவர் தமிழக அரசை நோக்கிச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க ஒன்றிய அரசு இராஜதந்திர ரீதியில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் வெறும் சம்பிரதாய கடிதங்களுடன் நில்லாமல், ஒன்றிய அரசுக்கு உணர்வுப்பூர்வமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மீனவர் பிரச்சினையில் விஜய்யின் இந்தத் தீவிர நிலைப்பாடு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.