ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

vijai

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், ஆளும் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் போர்க்கொடி தூக்கியுள்ளார். வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்தத் தேர்தல் ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் ஆட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போர். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் நேரடிப் போர்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

திமுகவின் தலைமையிலான கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என வர்ணித்த விஜய், முதல்வர் ஸ்டாலினை ‘சூப்பர் ஸ்டாண்ட்-அப் கொமெடியன்’ என விமர்சித்தார். “தமிழ்நாடு ஒருகாலத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற பெருந்தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது; ஆனால் இன்று அது கேலிக்குரிய மாநிலமாக மாறிவிட்டது,” என்று சாடினார். மேலும், டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என முதல்வர் கூறுவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முழக்கமே தவிர, சட்டமன்றத் தேர்தலுக்கு அல்ல என்றும், தவெக-வின் உண்மையான எதிரி திமுக மட்டுமே என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம், “யாரும் எங்களை விலைக்கு வாங்க முடியாது, யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்” என்ற உறுதிமொழியை விஜய் ஏற்க வைத்தார். “தமிழகம்தான் விஜய், விஜய்தான் தமிழகம். நாமும் மக்களும் உடலும் உயிரும் போன்றவர்கள்,” எனக் குறிப்பிட்ட அவர், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து மக்களைச் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து ஒரு ‘விசில் புரட்சி’யை ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version