ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

world 23

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார். இந்த உடன்படிக்கை எட்டப்பட்டதில் சீனாவின் பங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆமாம், அவர்கள் (சீனா) இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்” (I hear yes) என டிரம்ப் பதிலளித்துள்ளார். ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தகர்க்கத் தான் விதித்திருந்த 8 மணி நேரக் கெடு முடிவடைவதற்குச் சற்று முன்பாக, சீனா ஈரானுக்கு வழங்கிய இராஜதந்திர அழுத்தமே அந்த நாட்டைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் இதன்போது சூசகமாகத் தெரிவித்தார்.

ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளரான சீனா, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் தனது பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தீவிரமாகத் தலையிட்டதாகக் கூறப்படுகிறது. ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியிடம் சீனத் தரப்பு நேரடியாகப் பேசி, தற்போதைய பதற்றத்தைத் தணிக்குமாறும் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறும் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் எரிசக்தி ஏற்றுமதியில் சீனா கொண்டுள்ள செல்வாக்கே ஈரானின் பிடிவாதம் தளர முக்கியக் காரணமாக அமைந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரின் பகிரங்க மத்தியஸ்த முயற்சிகளுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ள போதிலும், அதன் பின்னணியில் சீனாவே காய்களை நகர்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து வெளியிட்ட ‘ஐந்து அம்ச அமைதித் திட்டம்’ (Five-Point Initiative) இந்த உடன்படிக்கைக்குத் தயார் படுத்தியது. குறிப்பாக, ஐநா பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைச் சீனா தடுத்த போதிலும், உள்நாட்டில் அமைதிக்குச் சம்மதிக்க ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அதிபர் டிரம்ப் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்திற்கு முன்னதாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைக் குறைப்பது இரு நாடுகளுக்கும் இராஜதந்திர ரீதியாக அவசியமான ஒன்றாக உள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உள்ள யுரேனியம் (Uranium) செறிவூட்டல் குறித்துக் கேட்கப்பட்டபோது, அது முறையாகக் கையாளப்படும் என்றும், இல்லையெனில் தான் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதித்திருக்க மாட்டேன் என்றும் டிரம்ப் உறுதியாகக் கூறியுள்ளார். சீனாவின் இந்தப் புதிய பாத்திரம், உலக அரசியலில் ஒரு முக்கிய அமைதித் தூதராக அந்த நாடு உருவெடுத்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version