மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு (ICE) முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தனது நிர்வாகம் தீவிரமாக மீளாய்வு செய்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மினியாபோலிஸ் நகரிலிருந்து இறுதியில் குடியேற்றத் தடுப்பு முகவர்களைத் திரும்பப் பெறப்போவதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இதற்கான காலக்கெடுவை அவர் அறிவிக்கவில்லை.
துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நான் விரும்புவதில்லை. ஆனால், ஒருவர் போராட்டக்களத்திற்குத் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் வருவதையும் நான் விரும்பவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்ஸ் ப்ரெட்டி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், அவர் ஒரு “உள்நாட்டு பயங்கரவாதி” என்றும் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை வர்ணிக்கின்றன.
ப்ரெட்டிக்கு எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை என நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர் கையில் கைபேசி மட்டுமே இருந்ததாகவும், அவரிடம் இருந்த துப்பாக்கி சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
ஃபெடரல் முகவர்கள் தங்களைச் சம்பவ இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக மினியாபோலிஸ் காவல்துறைத் தலைவர் பிரையன் ஓஹாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் ட்ரம்பின் ஆதரவாளர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது:
ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, பில் காசிடி போன்ற முக்கிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் விரிவான விசாரணை கோரியுள்ளனர்.
வழக்கமாக ட்ரம்பிற்கு ஆதரவளிக்கும் தேசிய துப்பாக்கிச் சங்கம் (NRA) கூட, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அலெக்ஸ் ப்ரெட்டியின் மரணத்தைத் தொடர்ந்து நியூயோர்க், சிகாக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குடியேற்றத் தடுப்பு முகவர்களின் அதிகார வரம்பு குறித்த விவாதங்கள் அமெரிக்க அரசியலில் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளன.