உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், ஐரோப்பிய நாடுகள் மீது கடும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உட்பட 8 நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்த வரி பொருந்தும்.
எதிர்வரும் பெப்ரவரி 1-ஆம் திகதி முதல் முதற்கட்டமாக 10 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது. ஒருவேளை ஜூன் 1-ஆம் திகதிக்குள் கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்த வரி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கிரீன்லாந்தை முழுமையாகவும் முற்றாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்த வரி விதிப்பு அமுலில் இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை விற்பனை செய்ய அந்த நாடு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த முட்டுக்கட்டையை உடைக்கவே ட்ரம்ப் வர்த்தக வரியை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகளில் இது மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாடுகள் மீது இத்தகைய வரி விதிப்பு மேற்கொள்ளப்படுவது உலகளாவிய வர்த்தக சமநிலையைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.