மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு ஆயுத விநியோகம் செய்யும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் “உடனடியாக” 50% சுங்க வரி (Tariff) விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி உத்தரவு சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்கும் ஒரு நாடு, அமெரிக்காவிற்கு விற்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உடனடியாக 50% வரி விதிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வருகிறது. இதில் எவ்வித விதிவிலக்குகளோ அல்லது சலுகைகளோ யாருக்கும் கிடையாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவ பலத்தைப் பலவீனப்படுத்துவதையும், அந்நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இராணுவ ஆதரவைத் தடுப்பதையுமே இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் ஏற்கனவே வர்ணித்துள்ள நிலையில், புதிய ஈரானிய அதிகாரிகளுடன் அமெரிக்கா நெருக்கமாகப் பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தில் பலவற்றிற்கு ஈரான் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குறிப்பாக இனி யுரேனியம் செறிவூட்டல் எதுவும் நடைபெறாது என்றும் டிரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானுடனான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஆயுத விநியோகம் தொடர்பான இந்த வரி விதிப்பானது ஈரானின் நட்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஈரானுடனான சுங்க வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்தும் அமெரிக்கா தொடர்ந்து ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான இராஜதந்திர உறவுகளைச் சீரமைக்கும் அதேவேளை, அந்த நாடு மீண்டும் இராணுவ ரீதியாக வலுவடைவதை இந்த 50% வரி விதிப்பு தந்திரோபாயம் தடுக்கும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.