டிக்டொக் (TikTok) சமூக ஊடகம் வாயிலாக நண்பர்களாகி, அவர்களுக்கு மனநல மருந்து மாத்திரைகளை வழங்கி மயக்கமடையச் செய்து, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கடந்த 19 ஆம் திகதி டிக்டொக் மூலம் அறிமுகமான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரைக் கொழும்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்துள்ளார்.
அங்கு அவருக்குத் தெரியாமல் உணவில் அல்லது பானத்தில் மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் வீரியம் மிக்க மாத்திரைகளைக் கலந்துள்ளார். மயக்கமடைந்தவரைப் பொரலஸ்கமுவவில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் வங்கி அட்டை மூலம் 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட 28 வயது சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பின்வரும் உண்மைகள் வெளியாகின:
இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரியிடமும் கொள்ளையிட்டுள்ளார். மொத்தமாக இருவரிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையடித்த நகைகளை நீர்கொழும்பு மற்றும் செட்டித் தெருவில் விற்றுப் பணம் பெற்றுள்ளார். தன்னைப் பிரிந்து சென்ற நண்பரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக, வத்தளை – மோதரை பகுதியைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு இதுவரை 30 இலட்சம் ரூபா வரை வழங்கியதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து பணத்தை அறவிடும் இயந்திரம் (POS machine), 5 போதை மாத்திரைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொரலஸ்கமுவ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.