அமெரிக்காவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டியுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இதற்குப் பாதையை வகுத்துள்ளது.
கடந்த 2025 ஜனவரி முதல் அமுலுக்கு வரவிருந்த தடையைத் தவிர்க்க, டிக்டாக் நிறுவனம் தனது அமெரிக்கக் கிளையை முழுமையாக மறுசீரமைக்கச் சம்மதித்துள்ளது.
டிக்டாக்கின் அமெரிக்கக் கிளை நிறுவனம் இனி உலகளாவிய டிக்டாக் செயலியில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனியான தகவல் கட்டமைப்புடன் சுயாதீனமாக இயங்கும்.
அமெரிக்கப் பயனர்களின் அனைத்துத் தரவுகளும் அமெரிக்காவிற்குள்ளேயே சேமிக்கப்பட்டு அங்கேயே நிர்வகிக்கப்படும். பைட்டான்ஸ் ஒப்புக்கொண்டுள்ள உரிம ஒப்பந்தத்தின்படி, சீனப் பொறியாளர்களுக்கு அமெரிக்கக் கிளையின் இயக்கம், மென்பொருள் புதுப்பித்தல் அல்லது பாதுகாப்பு விவகாரங்களில் நேரடித் தொடர்பு இருக்காது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டு வந்த தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை ஒத்திவைத்திருந்தார். இறுதியில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படாத வகையில் இந்த ‘நடுநிலை’ ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செயலியை முழுமையாக முடக்கவில்லை என்றாலும், பயனர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் டிக்டொக்கின் புகழ்பெற்ற அல்காரிதம் (Algorithm) மற்றும் அதன் பரிந்துரை முறைமை (Recommendation System) இனி அமெரிக்கக் கிளையினால் பிரத்தியேகமாக நிர்வகிக்கப்படும். இது உலகளாவிய பதிப்பில் இருந்து மாறுபட்ட அனுபவத்தை அமெரிக்கப் பயனர்களுக்கு வழங்கக்கூடும்.