மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

13 10

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ‘குடு ஷம்மி’, ‘டுடூ’ மற்றும் ‘ஹங்ச’ ஆகிய புனைப்பெயர்களால் அறியப்படும் இந்த மூன்று சந்தேகநபர்களும், பொலன்னறுவைக்குத் தப்பிச் செல்வதற்காகப் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ என்பவர், இன்று (12) தனது திருமணத்தை நடத்தவிருந்த நிலையில் இக்கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று சந்தேகநபர்கள் இளைஞனைத் தொலைபேசி மூலம் உணவகம் ஒன்றிற்கு வரவழைத்து, அங்கு வைத்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இளைஞனின் உடலை அங்கிருந்த குளம் ஒன்றில் போட்டு கழுவிய சந்தேகநபர்கள், உணவகத்திலிருந்த இரத்தக் கறைகளையும் துப்புரவு செய்துள்ளனர். பின்னர், உடலை கடலில் வீசுவதற்காக உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டியிலேயே ஏற்றிச் சென்றுள்ளனர். இருப்பினும், வில்லோரவத்தை பாடசாலை ஒன்றிற்கு அருகில் சென்றபோது முச்சக்கரவண்டியின் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், உடலத்துடன் முச்சக்கரவண்டியை அங்கேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது விசாரணைகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தது.

கொலை செய்யப்பட்ட இளைஞன் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version