ஐக்கிய நாடுகள் சபையை (UN) அமெரிக்கா தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், அதன் கௌரவத்தைச் சீரழிப்பதாகவும் வடகொரியா இன்று (12) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளது.
ஐநா சபையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் அண்மைக்கால நகர்வுகள் “வெட்கமற்றவை” என்றும், அவை உலகளாவிய அமைப்பின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் வடகொரியா சாடியுள்ளது.
தன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விட, “அமெரிக்காவின் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்” தான் ஐநாவில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை எனப் பியாங்யாங் வலியுறுத்தியுள்ளது.
“அமெரிக்கா உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பையே வெறுக்கிறது; அதனைத் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் (Nicolas Maduro) கைது செய்த சம்பவத்தைத் தொடர்ந்தே வடகொரியாவின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது.
மதுரோவின் கைது ஒரு “கடத்தல்” போன்றது என்றும், இது ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் வடகொரியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.
அமெரிக்கா சர்வதேசச் சட்டங்களை மதிக்காமல் “காட்டுமிராண்டித்தனமாக” நடப்பதாகத் தனது ஐநா தூதரகத்தின் மூலம் வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஐநா சார்ந்த பல அமைப்புகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள சூழலில், வடகொரியாவின் இந்த விமர்சனம் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய போக்கிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது.