அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் குறித்த அரசியல் விவாதத்திற்குப் பின்னர், 23 வயதுடைய லூசி ஹாரிசன் (Lucy Harrison) என்ற இளம்பெண் அவரது தந்தை கிரிஸ் ஹாரிசனால் (Chris Harrison) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தனது தந்தையைச் சந்திப்பதற்காகத் தனது காதலன் சாம் லிட்லருடன் (Sam Littler) அமெரிக்கா சென்றிருந்த லூசி, கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அரசியல் விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்துத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுமார் அரை மணிநேர வாக்குவாதத்திற்குப் பின்னர், கிரிஸ் தனது மகளைத் தனியாகப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சில நொடிகளில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. லூசியின் காதலன் சாம் லிட்லர் ஓடிச் சென்று பார்த்தபோது, லூசி நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகத் தரையில் கிடந்துள்ளார்.
“பாதுகாப்பிற்காக நான் வைத்திருந்த துப்பாக்கியை மகளிடம் காட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது” என்று கிரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் முன்னதாக மதுவுக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் என்பதும், சம்பவத்தன்று 500 மில்லி லிட்டர் வெள்ளை ஒயின் அருந்தியிருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லூசியின் காதலன் சாம் லிட்லர், நீதிமன்றத்தில் முன்னிலையாகிச் சம்பவத்தின் போது நடந்த வாக்குவாதங்கள் குறித்துத் தெளிவான வாக்குமூலத்தை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியான தீவிரவாதப் போக்குகளால் ஏற்படும் குடும்பச் சிதைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.