வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், இலங்கையில் வாகனங்களை ஓட்டுவதற்கான தற்காலிக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாருக்குப் பொருந்தும்? வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு இந்தச் சேவை தற்போதிலிருந்து எளிதாக்கப்பட்டுள்ளது.
எங்கு பெற்றுக்கொள்ளலாம்? கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) வளாகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் வெரஹெர (Werahera) அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2025.11.17 ஆம் திகதியிடப்பட்ட 2463/04 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானியின் படி திருத்தப்பட்ட மோட்டார் வாகனக் கட்டணங்களைச் செலுத்தி இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
விமான நிலையத்தில் இந்தச் சேவை கடந்த ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் வசதி கருதி எதிர்காலத்தில் இந்த வசதியை அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் விமான நிலையத்திலேயே தமக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.