சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை: அமெரிக்க போர் விமானங்களின் பயணங்களுக்குத் தடை!

02 14

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வான்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்க இராணுவம் விடுத்த சில கோரிக்கைகளைச் சுவிஸ் அரசாங்கம் சனிக்கிழமை (மார்ச் 14) நிராகரித்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி தனது ‘நடுநிலைமை’ (Neutrality) கொள்கையை நிலைநிறுத்தும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகச் சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

சுவிஸ் அரசாங்கம் மொத்தம் ஐந்து கோரிக்கைகளை மீளாய்வு செய்தது. அதில், ஈரானுடனான போருடன் தொடர்புடைய இராணுவ நோக்கங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு போர் விமானங்களின் பயணக் கோரிக்கைகள் (reconnaissance flights) முற்றாக நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், போருடன் நேரடித் தொடர்பில்லாத மனிதாபிமான மற்றும் பராமரிப்பு நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட மற்ற மூன்று விமானங்களின் (இரண்டு போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஒரு பராமரிப்பு விமானம்) பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமைச் சட்டமானது, ஒரு மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் இராணுவ நோக்கங்களுக்காகத் தனது வான்பரப்பைப் பயன்படுத்துவதை வன்மையாகத் தடை செய்கிறது. ஆனால், காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் மருத்துவ விமானங்கள், மனிதாபிமான உதவிகளை வழங்கும் விமானங்கள் மற்றும் மோதலுடன் தொடர்பற்ற சாதாரணப் போக்குவரத்து விமானங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. மார்ச் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் குறித்துச் சுவிட்சர்லாந்து மிகத் தெளிவான நிபந்தனைகளை விதித்துள்ளது. ஓவர்ஃப்ளைட் கோரிக்கைகளின் நோக்கம் தெளிவாக இல்லாவிட்டாலோ அல்லது சாதாரணப் போக்குவரத்து அளவைத் தாண்டி மேலதிக விமானங்கள் கோரப்பட்டாலோ அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. 1815 ஆம் ஆண்டு முதல் நடுநிலை நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து, தற்போதைய சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது பாரம்பரியக் கொள்கையில் உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

Exit mobile version