வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக் கணவன்மார் வீட்டுப் பொறுப்புகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தினைத் தெரிவித்துள்ளது. மனைவி சரியாகச் சமைப்பதில்லை மற்றும் முறையற்ற நடத்தையில் ஈடுபடுகிறார் எனக் கூறி விவாகரத்து கோரிய நபர் ஒருவரின் மனுவை விசாரித்த போதே, நீதியரசர்கள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி கருத்துக்களை வெளியிட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, “நீங்கள் ஒரு வேலையாளைத் திருமணம் செய்யவில்லை, ஒரு வாழ்க்கைத் துணையையே மணம் முடித்துள்ளீர்கள்” என மனுதாரருக்கு நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர். சமைப்பது, துணி துவைப்பது மற்றும் வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகள் பெண்ணுக்குரியது மட்டுமே என்ற பழைய மனப்பாங்கு மாற வேண்டும் என்றும், இத்தகைய வேலைகளில் கணவன்மாரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இன்றைய நவீன சூழலில் குடும்பப் பொறுப்புகள் இருவருக்கும் பொதுவானவை என்பதை நீதியரசர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்தனர்.
2017-ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு தற்போது எட்டு வயதில் மகன் ஒருவன் உள்ளான். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2019-ஆம் ஆண்டு முதல் இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். முன்னதாக, இவர்களுக்குக் கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்துத் தீர்ப்பைக் கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்தே கணவன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனைவியின் சமையல் திறமையைக் காரணம் காட்டி விவாகரத்து கோருவதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, மனுதாரரையும் அவரது மனைவியையும் சமரச முயற்சி அல்லது மேலதிக விசாரணைக்காக நேரில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப உறவுகளில் புரிதலும் பரஸ்பர உதவியும் அவசியம் என்பதை இந்த வழக்கு உணர்த்தியுள்ளது. சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் குடும்ப அமைப்பிலிருந்தே களைய வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அறிவுரை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

