இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11, 2026) நண்பகல் 12:11 மணியளவில் நாட்டின் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பொம்பரிப்பு, அனுராதபுரம், மிஹிந்தலை, கலென்பிந்துனுவேவ, அக்போபுர மற்றும் செருனுவர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் இன்று உச்சம் கொடுக்கவுள்ளது.
வெப்பமான வானிலைக்கு மத்தியிலும், நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், சபரகமுவ, வடமேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், அத்துடன் அனுராதபுரம், மன்னார், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். அதிகப்படியான சூரிய வெப்பம் நிலவும் காலப்பகுதிகளில் போதியளவு நீர் அருந்துவதுடன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு ஏற்கனவே சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக வெட்டவெளிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

