டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய மூலோபாயத் திட்டங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்கும் நிலையில், இந்த விரிவாக்க நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு சுமார் 90 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனை 2026 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்க விமான நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 9 முக்கிய நகரங்களுக்கான சேவைகளை வலுப்படுத்துவதுடன், அகமதாபாத் நகரம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 10-வது இந்திய இலக்காக விரைவில் இணைக்கப்படவுள்ளது.
இந்த புதிய விரிவாக்கங்கள் மூலம் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 12% வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 23% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துடன் (STPB) இணைந்து தீவின் கலாச்சாரத் திருவிழாக்கள், கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, இந்தியப் பயணிகளைக் கவரும் வகையில் ‘ராமாயணப் பாதை’ (Ramayana Trail) பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவியத் தொடர்புடைய வரலாற்றுத் தலங்களை ஆராய இந்தியப் பயணிகளுக்கு விசேட வசதிகள் செய்து தரப்படவுள்ளன.