இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு முடிவில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் 2025 இல் 8 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது 2024 உடன் ஒப்பிடுகையில் 22.8% வளர்ச்சியாகும்.சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டை விட 15.1% அதிகரித்துள்ளது. இருப்பினும், அதனூடாகக் கிடைத்த வருமானம் 1.6% மாத்திரமே உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகத்தைப் (Surplus) பதிவு செய்துள்ளது. ஏற்றுமதி வருமானம் அதிகரித்த போதிலும், இறக்குமதிகள் பெருமளவில் உயர்ந்ததால் வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
நீண்டகாலத் தடையின் பின்னர் வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், 2025 இல் மட்டும் வாகனங்களுக்காக 2.05 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாயின் பெறுமதி ஓரளவு வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. எனினும், 2026 ஜனவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் 0.2% வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் காணப்பட்ட பொருளாதார மேலதிக நிலை, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

