அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கைப் பூர்வீகத்தைக் கொண்ட பெண்ணும், அவரது அவுஸ்திரேலியத் துணைவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 47 வயதான சமிந்திகா ஜயவர்தன மற்றும் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் ஆகியோரே இவ்வாறு சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை பகல் 12.15 மணியளவில் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள், கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு பலத்த சத்தங்களைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் அவை வேட்டைத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் அல்லது பட்டாசுகள் என்று அவர்கள் கருதியுள்ளனர். இருப்பினும், இந்தச் சத்தம் குறித்த தகவல்கள் தற்போது காவல்துறை விசாரணையில் முக்கியக் குறிப்புகளாகப் பார்க்கப்படுகின்றன. உயிரிழந்த இருவரும் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்தவர்கள் என்பதையும், தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர் என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வேறு எவரையும் காவல்துறையினர் தேடவில்லை என்பதாலும், சம்பவ இடத்தில் பதிவான தடயங்கள் அடிப்படையிலும், இது ஒரு ‘கொலை-தற்கொலை’ (Murder-suicide) சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணங்களை உறுதிப்படுத்தப் பிரேதப் பரிசோதனை மற்றும் விரிவான தடயவியல் அறிக்கைகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சமிந்திகா ஜயவர்தனவின் திடீர் மறைவு, அவர் வசித்து வந்த சமூகத்திலும், அவரை அறிந்த நண்பர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது நண்பர்கள் சிலர் உயிரிழந்த தம்பதியினரின் செல்லப்பிராணியை எடுத்துச் செல்ல சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்குத் தொடர்பான மேலதிகத் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் இருப்பின், பொதுமக்கள் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்குமாறு விக்டோரியா காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.