மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூதரகம் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள், மூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு குழுக்களால் பகிரப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கண்டு தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் (IDF) போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை (பாதுகாப்பு அறைகளுக்குச் செல்லுதல் போன்றவை) முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய உத்தியோகபூர்வ ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படும் உடனுக்குடனான அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை மற்றும் இஸ்ரேலிய வார இறுதி விடுமுறை காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு (ஜனவரி 15-17) இலங்கைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ஏதேனும் எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தூதரகம் திறக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.