யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 237 வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (14) அதிகாலை வேளையில் இந்தச் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படைக் கப்பல் வசப’ (SLNS Vasaba) நிறுவனத்தைச் சேர்ந்த கச்சத்தீவு கடற்படைப் பிரிவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கச்சத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகை மறித்துச் சோதனையிட்டபோது, அதில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 237 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும் 25 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் கைப்பற்றப்பட்ட பறவைகள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் வழியாகத் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ள உயிரினங்களை முறையற்ற விதத்தில் நாட்டிற்குள் கொண்டு வருவதைத் தடுக்கக் கடற்படையினர் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.