யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை (29) இரவு, வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர் நெடுந்தீவு கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த கடற்படையினர், அவற்றை எல்லைக்கு அப்பால் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எல்லைக்குள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகைக் கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் இருந்த மூன்று இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.