இலங்கையை உலுக்கிய சுனாமி பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகளும், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலையினால், இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டது.
இம்முறை பிரதான நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.
அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுனாமி மட்டுமன்றி, அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாகச் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளை நினைவூட்டவும் இந்தத் தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.