நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களை இலங்கை அழைக்கிறது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (நவம்பர் 19) தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசியபோது அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை எடுத்துரைத்த அமைச்சர் ஹேரத், இந்தத் துறை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2.4 முதல் 2.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
“எதிர்கால வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு நமது மிகப்பெரிய சுற்றுலா மூல சந்தையான இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிக முக்கியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.
விருந்தோம்பல், இலக்குத் திருமணங்கள் (Destination Weddings), திரைப்படச் சுற்றுலா (Film Tourism) மற்றும் மதப் பயணம் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை, இந்தியப் பயணிகளுக்கு ஒரு சிறந்த குறுகிய தூர சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்பதற்கான வலுவான விமான இணைப்பு, கலாச்சார உறவு, விசா இல்லாத நுழைவு (Visa-free entry) காரணங்களையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

