தாய்லாந்தில் நடைபெற்ற 8-வது ஆசியக் கிண்ணத் தகுதிகாண் ஹாக்கி போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த இலங்கை ஹாக்கி அணி, இன்று (ஏப்ரல் 14) அதிகாலை வெள்ளிப் பதக்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இப்போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம், எதிர்வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் தகுதியையும் இலங்கை அணி உறுதி செய்துள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் 9 ஆசிய நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தத் தொடரில், இலங்கை ஹாக்கி வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமை இந்தத் தொடரின் மிக முக்கியமான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
தாய்லாந்திலிருந்து ஏர் ஏசியா (Air Asia) நிறுவனத்திற்குச் சொந்தமான FD-140 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12:20 மணியளவில் வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சாதனை படைத்த வீரர்களை வரவேற்பதற்காக இலங்கை ஹாக்கிச் சங்கத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் நேரில் வருகை தந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த வெற்றியானது இலங்கையின் ஹாக்கி விளையாட்டுத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச அரங்கில் இலங்கை ஹாக்கி அணி தனது பலத்தை நிரூபித்துள்ள நிலையில், ஆசியக் கிண்ணத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

