Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

Share

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (ஏப்ரல் 07, 2026) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது பேசிய அவர், சவூதி அராம்கோ விலைக் குறியீட்டின்படி (Saudi Aramco Price Index) சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 541.5 டாலரிலிருந்து 787.50 டாலராக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்த உலகளாவிய விலை அதிகரிப்பே உள்ளூர் சந்தையில் விலையேற்றத்திற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் விளக்கினார்.

எரிவாயு விநியோகத்தில் தற்போது எந்தவிதத் தடையுமில்லை எனப் பொதுமக்களுக்கு உறுதியளித்த அமைச்சர், புதிய அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் மத்திய கிழக்கிலிருந்து எரிவாயு கொள்வனவு செய்யப்படுவதில்லை எனத் தெரிவித்தார். தற்போது 80 சதவீத எரிவாயு அமெரிக்காவிலிருந்தும், மீதமுள்ள 20 சதவீதம் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. ‘ஜியோகாஸ்’ (Geogas) நிறுவனத்துடனான இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் விநியோகப் பாதையில் எவ்வித இடையூறுகளும் இன்றி நிலையான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் போதிய சேமிப்பு வசதிகள் (Storage Facilities) இல்லாததும் இந்த விலை உயர்விற்கு ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக மாலத்தீவில் உள்ள தற்காலிகக் கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது. அங்கிருந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் மேலதிக போக்குவரத்து மற்றும் சேமிப்புச் செலவுகள் ஏற்படுகின்றன. இந்த மேலதிகச் செலவுகளும் தற்போதைய விலை உயர்வில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான மேலதிகச் செலவுகளைத் தவிர்த்து, நிலையான விலையில் எரிவாயுவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதற்காக இலங்கையிலேயே நிரந்தரமான மற்றும் பாரிய அளவிலான எரிவாயு சேமிப்பு வசதிகளைக் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நிறைவடையும் பட்சத்தில், சர்வதேச சந்தையில் விலை மாறினாலும் உள்நாட்டில் அதன் தாக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...