ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

06 12

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் நோக்கில், ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான அவசரச் சந்திப்பொன்று, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (13) நண்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

ரஷ்ய எரிபொருள் கொள்வனவு தொடர்பில் முன்னதாக இருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இலங்கையின் எரிபொருள் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிப்பதாகத் தூதுவர் இதன்போது உறுதி அளித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் உறுதியளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version