2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

image 1200x800 16

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மதுவரி ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ், திணைக்களத்தின் பேச்சாளர் ஏ.ஏ.ரொஷான் பெரேரா இந்த அறிவிப்பை இன்று (16) வெளியிட்டுள்ளார். ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல் மற்றும் மத முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 19 நாட்களில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாட்கள், உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் தினம் ஆகியவை அடங்கும். குறிப்பாக, மே மாதத்தில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 1, 2 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்கள் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினத்திலும் நாடளாவிய ரீதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13, 14) மற்றும் நத்தார் தினம் (டிசம்பர் 25) ஆகிய மூன்று நாட்களில் மட்டும் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 3 நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட ஹோட்டல்கள், பூட்டிக் வில்லாக்கள் (Boutique Villas) ஆகியவற்றில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விருந்தினர்களுக்கு (In-house guests) மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதி உண்டு.

இந்தத் தடை உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நிலையங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொதுமக்கள் ‘1913’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version