முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல தசாப்தங்களைக் கடந்தும் இன்றும் முடிவின்றித் தொடர்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர் இராமசாமி ரமேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த பேச்சுக்கள் 1994ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் முயற்சி மிகவும் காத்திரமானது எனினும், அது வெற்றிபெறவில்லை. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு, சபை நடுவே தீயிட்டு எரிக்கப்பட்ட கசப்பான சம்பவத்தை அவர் நினைவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து வந்த மஹிந்த ராஜபக்ஷ, ‘நல்லாட்சி’ அரசாங்கம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் அவை தோல்வியிலேயே முடிந்தன.
இதேபோன்றதொரு முயற்சியே தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இன்றும் தொடர்வதாக விரிவுரையாளர் இராமசாமி ரமேஷ் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது சுட்டிக்காட்டினார். நீண்டகாலமாகத் தொடரும் இந்த முயற்சி எப்போது முழுமையடையும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

