மாற்றங்களுக்கு ஏற்ப மாறாவிட்டால் ஓரங்கட்டப்படுவோம்: இலங்கை அணியை எச்சரிக்கும் குமார் சங்கக்கார!

16

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது ஆழ்ந்த கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார்.

பிப்ரவரி 25 அன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில், 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் துழாவிய இலங்கை அணி 107 ரன்களுக்குச் சுருண்டது. இது சூப்பர்-8 சுற்றில் இலங்கை சந்தித்த இரண்டாவது தோல்வியாகும். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள சங்கக்கார, “2014-இல் உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, டி20 உலகக் கோப்பைகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறத் தவறியுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தற்போது மிகவேகமாகப் பரிணமித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நவீன கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் மற்றும் வேகத்திற்கு ஏற்ப இலங்கை அணி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார். “சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படும் அதிரடி மாற்றங்களுக்கு ஏற்ப நாம் பரிணமிக்க வேண்டும்; இல்லையெனில், உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு மத்தியில் இலங்கை அணி தனது முக்கியத்துவத்தை இழந்து (Irrelevant), பொருத்தமற்ற ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரித்துள்ளார்.

அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள பலவீனங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை சங்கக்காரவின் இந்தப் பதிவு வலியுறுத்துகிறது.

 

Exit mobile version