வரவிருக்கும் புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தங்களது மதக் கடமைகளை இடையூறின்றி நிறைவேற்றுவதற்கு ஏதுவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசேட சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விசேட ஏற்பாடுகள் பெப்ரவரி மாதம் 19-ம் திகதி முதல் மார்ச் மாதம் 21-ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நோன்பு கால மத வழிபாடுகளுக்காக (தராவிஹ் மற்றும் சஹர் போன்றவற்றுக்காக) கீழ்வரும் நேரங்களில் ஊழியர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது:
அதிகாலை: 3.30 முதல் காலை 6.00 மணி வரை.
பிற்பகல்: 3.15 முதல் மாலை 4.15 மணி வரை.
மாலை: 6.00 மணி முதல் 7.00 மணி வரை.
இரவு: 7.30 முதல் 10.30 மணி வரை.
தவிர்க்க முடியாத சூழல்களில், தகுந்த காரணங்களின் அடிப்படையில் விசேட விடுமுறைகளை வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள அனைத்து முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் பண்டிகை முற்கொடுப்பனவை (Festival Advance) வழங்குவதற்கான நடைமுறைகளையும் இந்தச் சுற்றுநிரூபம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் பல்லினக் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையிலும், ஊழியர்களின் மத உரிமைகளை மதிக்கும் வகையிலும் இந்த வருடாந்த நடைமுறை இம்முறையும் உரிய காலப்பகுதிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.