மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தென்கொரியா தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, உள்நாட்டு எரிபொருள் விலைகளுக்கு உச்சவரம்பு (Price Ceiling) விதிக்கும் முடிவை ஜனாதிபதி லீ ஜே மியுங் அறிவித்துள்ளார். பெட்ரோலியப் பொருட்களின் விலை மக்கள் மீது சுமையாக மாறுவதைத் தவிர்க்க, இந்த ‘அதிகபட்ச விலை முறை’ விரைவாகவும் துணிச்சலாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த விலைக்கட்டுப்பாட்டு முறையானது தற்போதைய வாரத்திற்குள்ளேயே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த அதிகபட்ச விலையானது அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படும். தென்கொரியாவிடம் தற்போது 208 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் விநியோகத் தடைகளை ஈடுகட்ட மாற்று வழிகள் மூலம் எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு மோதல்களின் எதிரொலியாகத் தென்கொரியாவின் நிதிச் சந்தையும் இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடான KOSPI 6 சதவீதம் சரிவடைந்தது. ஒரு கட்டத்தில் இந்தச் சரிவு 9 சதவீதத்தை எட்டியதால், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக வர்த்தகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அத்துடன், கொரிய நாணயமான ‘வோன்’, அமெரிக்க டொலருக்கு எதிராக 1 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 1,500 என்ற அபாயகரமான எல்லையை நெருங்கியுள்ளது.
சந்தையை நிலைப்படுத்துவதற்காகத் தேவைப்படின், 100 டிரில்லியன் வோன் (சுமார் 67 பில்லியன் டொலர்) மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தை விரிவுபடுத்தவும், மேலதிக நிதி ஆதாரங்களை உருவாக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் தென்கொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள், போர்ச் சூழலில் ஒரு நாடு தனது எரிசக்திப் பாதுகாப்பையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்குப் புதிய முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

