கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காணொளி வெளியிட்ட பெண், அந்த நபர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அவருடன் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா எனும் பெண், தீபக் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறி அதனைத் தனது கைபேசியில் காணொளி எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இந்தக் காணொளி சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு, இணையதளங்களில் தீபக்கிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் சமூக ரீதியான அவதூறுகளும் எழுந்தன.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தனது உறவினர்களிடம் கூறிப் புலம்பிய தீபக், சமூகத்தில் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஷிம்ஜிதா வேண்டுமென்றே பேருந்தில் நடந்தவற்றைத் தவறாகச் சித்தரித்து, திட்டமிட்டு இந்தக் காணொளியை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டியமை மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஷிம்ஜிதா முஸ்தபாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் ஒருவரைத் தண்டிக்கும் கலாசாரம் (Trial by Media) ஒரு உயிரைப் பறித்துள்ளதாக இச்சம்பவம் குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.