சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து மீளக் கொழும்புக்குத் திரும்பும் இருவழிச் சேவைகளும் தற்போது முழுவீச்சில் இயங்கி வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி ஆரம்பமான கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான விசேட சேவை எதிர்வரும் ஏப்ரல் 13-ஆம் திகதி வரை தொடரும். அதேபோல, புத்தாண்டு விடுமுறை முடிந்து வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 21 வரை விசேட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு பிராந்திய பணிமனைகளிலிருந்து 1,500 மேலதிக பேருந்துகள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
நேற்று (ஏப்ரல் 10) முதல் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மட்டும் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 1,490 பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் கண்டிக்கு 148 பேருந்துகளும், ஹட்டனுக்கு 98 பேருந்துகளும், பதுளைக்கு 60 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மலையகப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து வீதம் பயணங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. தனியார் பேருந்து சேவைகள் குறைவாகக் காணப்படும் கதிர்காமம், தங்கல்லே, எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற தூர இடங்களுக்குத் தட்டுப்பாடின்றி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை உடனுக்குடன் அவதானித்து, தேவைப்படும் இடங்களுக்கு மேலதிக பேருந்துகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தலைவர் சஜீவ கனகரத்ன மேலும் குறிப்பிட்டார்.