தென் கடற்பகுதியில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், பன்னல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்தி சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கட்சி தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது X பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தென் கடற்பகுதியில் நேற்று (நவம்பர் 20) போதைப் பொருட்களுடன் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், ஒருவரைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் (PNB) கைது செய்திருந்தனர்.
பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
படகில் இருந்து 5 பைகளில் 100 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின்.
13 பைகளில் 200 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 261 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் (Crystal Meth) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும், அதில் இருந்த 6 மீனவர்களும் நேற்று மாலை தங்காலையில் மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்தான் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் எனப் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

