2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தின் போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைக்கும். அப்போது வளிமண்டலத்தின் ஒளிச்சிதறல் காரணமாக நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால், இது ‘இரத்த நிலவு’ (Blood Moon) என்று அழைக்கப்படுகின்றது.
இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் 58 நிமிடங்கள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழுச் சந்திர கிரகணத்தை ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வசிப்பவர்கள் எவ்வித உபகரணங்களின் உதவியுமின்றி வெறும் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருக்கும் பட்சத்தில், இந்த இரத்த நிலவைக் காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தைப் பார்ப்பது கண்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் பொதுமக்கள் இதனைப் பாதுகாப்பாகப் பார்வையிடலாம். 2026-ஆம் ஆண்டில் நிகழவுள்ள மிக முக்கியமான வானியல் மாற்றங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது.