அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கியூபா உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுக்கு அருகே, கியூப கடலோர காவல்படை கப்பலை அணுகிய அமெரிக்க படகில் இருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
படகில் இருந்த 10 பேரும் அமெரிக்காவில் வசிக்கும் கியூபா நாட்டவர்கள். சிலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் ஆயுதங்களுடன் காணப்பட்டனர். அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நாட்டுக்குள் ஊடுருவத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.காயமடைந்த ஆறு பயணிகளும் அடையாளம் காணப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், கியூபாவுக்கான வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்துள்ளதால் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

