தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில் நேற்று (நவம்பர் 27) நாம் தமிழர் கட்சியால் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இலங்கையின் இறுதிப் போர் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.
சீமான் தனது உரையில், “வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோர்: “போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதிகள் கூறினர். அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர்.”
“வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது சர்வதேசப் போர் மரபு. இருப்பினும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள்? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.”
“முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர். சரணடைந்த 10,000க்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது சர்வதேசத்திலிருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?”
மேலும், அவர் தனது உரையை முன்னெடுத்தபோது, தேசிய தலைவரையும் நினைவு கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.