மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பி, மலேசியா நோக்கி ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட ரோஹிங்கியா ஏதிலிகளின் படகு அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவர் நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் படகில் ஏதிலிகள் அதிகளவில் ஏற்றப்பட்டமையே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தோனேசியா நோக்கிப் பயணித்த பங்களாதேஷ் கடலோர காவற்படை கப்பல் ஒன்று, கடந்த ஏப்ரல் 9-ஆம் திகதி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 9 பேரைக் காப்பாற்றியுள்ளது. சுமார் 36 மணிநேரம் நடுக்கடலில் உயிருக்குப் போராடிய நிலையில் தாங்கள் மீட்கப்பட்டதாக உயிர் தப்பியவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். படகின் என்ஜின் எண்ணெய் கசிந்து உடல் வெந்த நிலையில் மீட்கப்பட்ட ரபிகுல் இஸ்லாம் என்பவர் கூறுகையில், படகிற்குள் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக மூச்சுத்திணறி மாத்திரம் 25 முதல் 30 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட 9 பேரில் 6 பேர் ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஏழை ஏதிலிகளிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை இவ்வாறு உயிராபத்தான நிலையில் அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. கைதானவர்களிடம் ஆள்கடத்தல் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரோஹிங்கியா மக்களின் நீண்டகால இடப்பெயர்வு மற்றும் அவர்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் சர்வதேச அளவில் எட்டப்படாததே இவ்வாறான தொடர்ச்சியான உயிரிழப்புகளுக்குக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2017-ஆம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறையைத் தொடர்ந்து சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அங்கிருந்து அவர்கள் பிற நாடுகளுக்குச் செல்ல முற்படும்போது இத்தகைய துயரங்கள் அரங்கேறி வருகின்றன.