யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டு கழிவுநீரை மழைநீர் வழிந்தோடும் பொது வாய்க்காலுக்குள் சட்டவிரோதமாகத் திருப்பிவிட்ட ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
வல்வெட்டித்துறை தென்கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், தனது வீட்டில் இருந்து வெளியேறும் அசுத்தமான கழிவுநீரை, வீதியில் உள்ள மழைநீர் வாய்க்காலுக்குள் விடுபடி குழாய் அமைத்திருந்தார். இதனால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் (PHI) ப. தினேஷ் கள விஜயம் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தினார். குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நபருக்கு எதிராகப் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் (23.01.2026) வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட நபர் தனது தவறை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.
பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவுநீரை வீதிகளில் விடுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.