வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்களை உடனடியாக விடுவித்து, அவற்றை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) நேற்று (நவம்பர் 13) பாராளுமன்ற அமர்வில் வலியுறுத்தினார்.
திரு. கோடீஸ்வரன் தனது உரையில் மேலும் தெரிவித்தது “கார்த்திகை மாதத்தில் வடகிழக்கிலே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளன. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், பொதுமக்கள் இறந்த அந்தத் தூய்மையான இடங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.”அந்தத் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவப் பிரசன்னத்தை நகர்த்தித் தமிழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
“இதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள் அந்த இடங்களுக்கான நிதியை ஒதுக்கிப் புனிதமாகப் பாதுகாப்போம்,” என அவர் உறுதியளித்தார். மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.