சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த இலங்கை பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவர் இன்று (24) பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராகப் பல திட்டமிட்ட கொலைகள், பாரிய கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சந்தேகநபர் தொடர்பான விரிவான விசாரணைகள் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் (DIG) நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஏனைய குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

