அபிஷேக் சர்மா வெறும் ‘ஸ்லோகர்’ அல்ல, யுவராஜ் சிங் போன்ற திறமையாளர்: முகமது அமீருக்கு அஸ்வின் பதிலடி!

04 3

இந்திய அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா தொடர்பாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வெளியிட்ட விமர்சனத்திற்கு, இந்திய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அபிஷேக் சர்மாவை ஒரு ‘ஸ்லோகர்’ (Slogger) என அமீர் விமர்சித்திருந்த நிலையில், அஸ்வின் அதனை முற்றாக மறுத்துள்ளார்.

தனது யூடியூப் தளத்தில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அஸ்வின், அபிஷேக் சர்மாவின் துடுப்பாட்ட பாணி இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை நினைவூட்டுவதாகப் புகழாரம் சூட்டியுள்ளார். “யுவராஜ் சிங்கைப் போலவே இவரும் பந்தை மிக இலகுவாக எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பும் ஆற்றல் கொண்டவர். அவரிடம் சிறந்த டைமிங் மற்றும் பந்தைக் கணிக்கும் திறன் உள்ளது” என அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிஷேக் சர்மாவை ஒரு திறமையான துடுப்பாட்ட வீரர் என்பதை விட, பந்தைச் சும்மா அடித்து விளையாடுபவர் என அமீர் விமர்சித்திருந்தார். இருப்பினும், டி20 கிரிக்கெட்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடுவது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ள அஸ்வின், அபிஷேக் சர்மா அதனைச் செவ்வனே செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் சதம் விளாசியதன் மூலம் அபிஷேக் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version