புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தங்களது மத வழிபாடுகளைச் சிரமமின்றி மேற்கொள்வதற்கு வசதியாக, வேலை நேரங்களை (Work Shifts) ஒழுங்குபடுத்தி வழங்குமாறு சகல அரச நிறுவனங்களுக்கும் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ரமலான் காலத்தில், முஸ்லிம் ஊழியர்களின் மதக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்களது வேலை நேரங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
தகுதியுள்ள சகல முஸ்லிம் அதிகாரிகளுக்கும் ரமலான் பண்டிகை முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக பண்டிகை முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவானது சகல அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்புச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் அரச ஊழியர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.