நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLSMU) அறிவித்துள்ளது.
புதிய திருத்தங்கள் உள்ளடங்கிய ரயில் நிலைய அதிபர் சேவையின் ஆட்சேர்ப்பு நடைமுறை (Recruitment Procedure) தொடர்பான 05 பிரதிகளை, அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்திற்காகச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள பாரிய தாமதம்.
ஆட்சேர்ப்பு நடைமுறையுடன் தொடர்புடைய இடைக்காலப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதில் நிர்வாகத் தரப்பு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை.
இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பலமுறை எழுத்துமூலம் அறிவித்தும், ரயில்வே திணைக்களம் அல்லது உரிய அமைச்சின் அதிகாரிகள் இதுவரை எவ்வித உருப்படியான தீர்வுகளையும் வழங்கவில்லை எனச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்வரும் 23-ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தினால், ரயில்களை இயக்குதல், சமிக்ஞை கையாளல் மற்றும் பயணச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய ரயில்வே சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது அன்றாடப் பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் ரயில் போக்குவரத்து மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ள நிலையில், இந்தப் போராட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் உடனடிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.