நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே இயங்கும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இன்று (17) தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், புதன்கிழமைகளில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தனியார் துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கை வர்த்தகச் சபை மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயலுமானவரை தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்து பணியாற்றும்’ (Work-from-home) வசதிகளை வழங்குவதன் மூலம், வீதிகளில் போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் தேவையையும் பெருமளவு குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“பொதுப் போக்குவரத்துச் சேவைகள் குறைக்கப்படுவதால், பொதுமக்கள் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்குச் செல்லுதல் போன்ற அவசர மருத்துவத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என சந்திரகீர்த்தி வலியுறுத்தினார்.
புதன்கிழமைகளில் மக்களின் நடமாட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், வரையறுக்கப்பட்ட அளவில் இயங்கும் பேருந்து மற்றும் இரயில் சேவைகள் தேவையற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் மூலம் நாட்டின் எரிபொருள் கையிருப்பைத் திறம்பட முகாமைத்துவம் செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.