அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நோயாளர் பாதிப்புகளைக் கண்டித்து, வைத்தியசாலைப் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் நேற்று (04) மாலை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த வைத்தியசாலையில் சிகிச்சைகளைப் பெறுவதில் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நிர்வாக ரீதியான குளறுபடிகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரில், நேற்று மாலை 4:30 மணியளவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வைத்தியசாலைக்கு முன்பாக பெருமளவிலான மக்கள் திரண்டனர்.
நேற்று மாலை 6:00 மணி வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் பொருட்டு பொலிஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விரிவான மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்குத் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டங்கள் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.