வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP), 9 மாகாணங்களிலும் தங்களுடைய ‘திசைக்காட்டி’ சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது பற்றி NPP தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
உத்தேச முதலமைச்சர் பட்டியலில் NPP உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இவர் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.