திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் போரிட்டு இந்தப் புத்தர் சிலையைப் பாதுகாத்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
அன்று பிரபாகரனிடம் இருந்து பாதுகாத்த சிலையை, இன்று அரசாங்கத்தில் உள்ள மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தில் இருக்கும் “புத்தம்புதிய பிரபாகரன்களிடம்” இருந்து பாதுகாக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
கடற்கரையோரத்தில் உள்ள ஏனைய மதஸ்தலங்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்படாத நிலையில், புத்தர் சிலையை மட்டும் அகற்றுவது பௌத்த தர்மத்திற்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்டு செய்யும் செயல் என அவர் குற்றம் சாட்டினார்.
அருகில் உள்ள இந்து கோயில் ஒன்றை அகற்ற நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், ஒன்பது பிக்குகள் கைது செய்யப்பட்டதை “இருள் சூழ்ந்த காலகட்டம்” என வருணித்தார்.
குறித்த பகுதியில் முறையான அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாகக் கூறி பிக்குகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீதிமன்றம் முன்னெடுத்து வருகிறது. சரத் வீரசேகரவின் இந்தக் கருத்துக்கள் திருகோணமலைப் பகுதியில் அரசியல் மற்றும் மத ரீதியான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.